ஹைதராபாத்: செம்மர கடத்தல் துப்பாக்கி சூடு பற்றி விசாரிக்க கூடாது என்று ஆந்திர மாநில அரசுக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப் படை ஐஜி காந்தாராவ் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில், செம்மர கடத்தலின் போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அது பற்றி விசாரிக்க உத்தரவிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடத்தல்காரர்களால் காவலர்கள் தாக்கப்படுவதை தடுக்க பதில் தாக்குதலுக்கு அனுமதிக்க வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார் மீது சட்ட விசாரணை கிடையாது என்று அறிவிக்க வேண்டும்.
வனப்பகுதியில் பணியாற்றும் போலீஸாருக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும். செம்மர கடத்தலை முற்றிலுமாக தடுப்பதற்காக நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு நடவடிக்கை மீது சட்ட விசாரணை கூடாது.
வனப்பகுதியில் பணியாற்றும் போலீஸார் பதில் தாக்குதல் நடத்தும் போது உயிரிழப்பு ஏதேனும் நேரிட்டால் காவலர்கள் மீது சட்ட விசாரணை நடத்தக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செம்மரம் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் திருவண்ணாமலை, கிருஷ்ணாகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி ஆந்திர போலீஸாரால் கைது செய்யப்படுகின்றனர்.
செம்மரக் கடத்தல் புள்ளிகளின் ஆசை வார்த்தையில் சிக்கி தமிழர்கள் பலர் அடிக்கடி ஆந்திராவில் கைது ஆகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.