கண்ணூர்: கேரளாவில் இடதுசாரி இயக்க ஆதரவு கல்லூரி ஒன்றின் பத்திரிகையில், தேசிய கீதத்தை அவமதிக்கும் விதத்தில் கேலிச்சித்திரம் வெளியானதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள தளசேரியில் அமைந்துள்ளது பிரென்னன் கல்லூரி. அரசு கல்லூரியாக இருந்தாலும் இந்த கல்லூரி இடதுசாரி இயக்க சிந்தனைகளுக்கு ஆதரவு கொண்டதாக கருதப்படுகிறது. இந்த கல்லூரியின் 125-ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடடும் பொருட்டு, அக்கல்லூரியில் உள்ள 'இந்திய மாணவர் சங்கம்' அமைப்பினைச் சேர்ந்தவர்கள், 'பெல்லட்' எனப்படும் மாணவர் இதழ் ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டார்கள்.
இந்த இதழில் இடம் பெற்றுள்ள கேலிச்சித்திரம் ஒன்றுதான் தற்பொழுது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. அந்த குறிப்பிட்ட கேலிச்சித்திரத்தில், திரையரங்கம் ஒன்றில் தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் நெருக்கமாக இருப்பது போன்றும், அவர்களுக்கு பிண்ணனியில் தேசிய கொடியின் படமும் இடம்பெற்றுள்ளது.
இது பற்றிய தகவல் அறிந்தவுடன் வலதுசாரி சிந்தனை கொண்ட மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), இந்த பத்திரிக்கை உருவாக்கத்தின் பின்னணியில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் இத்தகைய குற்றசாட்டுகளை கல்லூரி முதல்வர் முரளிதாஸ் மறுத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசும்பொழுது, 'அந்த பத்திரிக்கையில் சர்ச்சைக்குரிய வகையில் ஏதும் இல்லை. குறுகிய மனப்பான்மையுடன் பார்க்கும் பொழுது வேண்டுமானால் அப்படி தோணலாம். நாங்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களை சமாதானப்படுத்தமுயற்சித்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.
தற்பொழுதைய கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.