புதுதில்லி: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' அமைப்பின் சார்பில், அயோத்தியில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான 'இப்ஃதார்' நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப்பிரகேச மாநிலம் அயோத்தியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' என்னும் அமைப்பு செயல்படுகிறது.2002-ஆம் ஆண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அப்போதைய தலைவரான கே.எஸ்.சுதர்ஷனின் முயற்சியால் இந்த அமைப்பு துவங்கப்பட்டது. ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இஸ்லாமியர்களுடன் இணைந்து செயல்பட இந்த அமைப்பானது துவங்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில், புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான 'இப்ஃதார்' நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு அயோத்தியில் உள்ள முக்கியமான இஸ்லாமிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரும், 'முஸ்லீம் ராஷ்ட்ரிய மன்ச்' அமைப்பின் புரவலரான இந்திரேஷ் குமார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்த 'இப்ஃதார்' விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் தாங்கள் இனி மாட்டிறைச்சி உண்ணுவதில்லை என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அத்துடன் பசுவின் பாலானது உடலுக்கு ஆரோக்கியமானது என்றும்,. மருத்துவ குணங்கள் கொண்டது என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அத்துடன் பசுக்களை வைத்து பராமரிப்பதில் உள்ள நியாயங்களையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
இவ்வாறு இந்திரேஷ் குமார் தெரிவித்தார்.