உத்தரப் பிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த சமாஜவாதி அரசு மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரித்த பள்ளிப் பைகள் குஜராத் மாநிலத்துக்கு எவ்வாறு சென்றது என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ்
யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் குஜராத் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய பைகளில் அகிலேஷ் யாதவின் படம் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அது உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்தது. அவை எப்படி குஜராத்துக்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த அந்த
மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட பைகள் எப்படி குஜராத்துக்கு சென்றது என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அந்த பைகளில் உள்ள படத்தை வேண்டுமானால் அவர்களால் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க முடியும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கட்சி ஆட்சியில் இருந்தபோது செய்த சாதனைகளை மறைத்துவிட முடியாது' என்று அவர் கூறியுள்ளார்.
'பைகள் இடம் மாறிய விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச பாஜக அரசும், குஜராத் மாநில பாஜக அரசும்தான் விளக்கமளிக்க வேண்டும்' என்று சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர செளத்ரி வலியுறுத்தியுள்ளார்.