புது தில்லி: ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு உருளை வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கான பாட்டியலில் சில தொழிலதிபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
புகையில்லாத கிராமத்தை உருவாக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
சமையல் எரிவாயு இணைப்புப் பெற, எரிவாயு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய டெபாசிட் தொகையை மத்திய அரசே வழங்கும். காஸ் அடுப்பும் இலவசமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களின் பட்டியலில், சில தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பட்டியலில் இடம்பெற்றிருப்போர் வீடுகளுக்கு கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நேரில் சென்ற போது இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து புதிய பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.