இறைச்சிக்காக மாடு விற்கத் தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இறைச்சிக்காக மாடு விற்கத் தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இரு வாரங்களுக்குள் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்ட நிலையில், தற்போது மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பசு, எருது, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பனை செய்யக் கூடாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 26-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், மாடுகளை வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக மட்டுமே பரஸ்பரம் விற்பனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த முடிவு, தனிமனித உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதனிடையே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கேரளம் மற்றும் மேகாலய சட்டப் பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக இருவேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கால்நடைகள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடானது, விரும்பிய உணவை உண்ணும் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும், இதனால், மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவற்றின் மீதான விசாரணை, வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.நரசிம்மா வாதாடியதாவது: கால்நடைகளின் விற்பனையை நாடு முழுவதிலும் ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இத்தகைய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. இருப்பினும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றக் கிளையானது இடைக்காலத் தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து மனுக்கள் மீது இரு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 11-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com