மும்பை தொடர்பு குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிழல் உலக தாதா அபு சலேம், போர்ச்சுகல் நாட்டுக்கே தன்னை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி தொடர்பு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கில் அபு சலேமுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததால் விசாரணைக்காக போர்ச்சுகல் நாட்டிலிருந்து அவர் நாடு கடத்தப்பட்டார். இவ்வழக்கில் அபு சலேம் உள்பட 6 பேரைக் குற்றவாளிகள் என்று அண்மையில் தடா சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. எனினும், தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே போர்ச்சுகல் நாட்டுக்கே தன்னை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றதை அபு சலேம் அணுகினார்.
இதுகுறித்து அவரது வழக்குரைஞர் சாபா குரேஷி மும்பையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: போர்ச்சுகலில் இருந்து அபு சலேம் நாடு கடத்தப்படலாம் என்று அளிக்கப்பட்ட உத்தரவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனவே, அவரை மீண்டும் போர்ச்சுகலுக்கு அழைத்துக் கொள்ள அந்நாட்டுக்கு உத்தரவிடுமாறு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றதை அணுகியிருக்கிறோம். அந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போர்ச்சுகல் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார் சாபா குரேஷி.