அனைத்து கட்சியினரிடமும் ஆதரவு கோருவேன்: ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக பாஜக தலைமையிலான

புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளரும், பிகார் ஆளுநருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க தில்லிக்கு நேற்று திங்கள்கிழமை சென்ற அவர், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.

மேலும், தனக்கு அனைவரும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தம்மை பாஜக தலைமை அறிவித்த சில நிமிடங்களிலேயே ராம்நாத் கோவிந்த் தில்லி விரைந்தார். பிரதமர் மோடியிடம் வாழ்த்துப் பெற்ற அவர், பின்னர் அமித் ஷாவின் இல்லத்துக்குச் சென்றார்.

இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சாமானிய மனிதனான நான் தற்போது மிகப் பெரிய பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் பிரதிநிதிகள் அனைவரிடமும் ஆதரவு கோரத் திட்டமிட்டுள்ளேன்.

குறிப்பாக முக்கியமான அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளேன். நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com