நாட்டிலேயே இயற்கைப் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை அறிவிக்கும் ஏற்பாடுகளை செய்திருக்கும் முதல் மாநிலமாக ஒடிஸா திகழவிருக்கிறது என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
இயற்கை பேரிடர் குறித்த மாநில அளவிலான குழுவின் கூட்டம் நவீன் பட்நாயக் தலைமையில் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார். நவீன் பட்நாயக் மேலும் கூறியது:
மாநிலத்தில் 6 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் கோபுரங்களில் சைரன் ஒலி மூலம் எச்சரிக்கை விடுக்கப்படும். இதன் மூலம் அந்தந்தப் பகுதி மக்கள் இயற்கைப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கைத் தகவல்களை பெறுவர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களும் அவ்வப்போது வெளியிடப்படும். இந்த ஏற்பாட்டால் சூறாவளி, புயல், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது மக்களின் உயிரையும் சொத்துகளையும் காப்பாற்ற ஏதுவான சூழல் ஏற்படும்.
பல்வேறு இயற்கை பேரிடர்களின்போது உயிரிழப்பைத் தடுக்கும் நோக்கில் பேரிடர் இடர்பாடுகளை குறைப்பதற்கு பல்வேறு திறன் மிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து இயற்கைச் சீற்றங்களின்போதும் ஒருவர்கூட உயிரிழக்கக்கூடாது என்கிற அணுகுமுறையை அரசு பின்பற்றி வருகிறது என்றார் நவீன் பட்நாயக்.