கேரளத்தில் சர்ச்சையில் சிக்கிய லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் அதிகாரி ஜேக்கப் தாமஸுக்கு முக்கியத்துவம் இல்லாத மாநில பயிற்சித் துறை தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரியான ஜேக்கப் தாமஸ், லஞ்ச ஒழிப்புத் துறை தலைவராக இருந்தபோது மாநில தொழில்துறை அமைச்சராக இருந்த ஜெயராஜன் தனது உறவினர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது ஜேக்கப் மேற்கொண்ட நடவடிக்கை கேரளத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசுக்கு பிரச்னையை ஏற்படுத்தியது.
மேலும், மாநில அரசின் இரு கூடுதல் செயலர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அவர்கள் வீடுகளில் சோதனை நடத்த ஜேக்கப் உத்தரவிட்டார். இது தொடர்பாக அந்த அதிகாரிகள் முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, ஜேக்கப்பை விடுப்பில் செல்லுமாறு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அதிக முக்கியத்துவம் இல்லாத மாநில பயிற்சித் துறை தலைவர் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, ஜேக்கப் தாமஸ் எழுதிய சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.ஜோசப் கடிதம் எழுதியதை அடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை பினராயி விஜயன் தவிர்த்துவிட்டார்.
கேரளத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதும், காங்கிரஸ் தலைவர்கள் மீதும் தனது சுயசரிதையில் ஜேக்கப் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.