தெலங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டத்தில் சுமார் 30 பயிற்சிக் காவலர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.ஸ்ரீநிவாஸ் திங்கள்கிழமை கூறியதாவது: அடிலாபாதில் காவல்துறையினருக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சி பெறும் 30 காவலர்களுக்கு திங்கள்கிழமை அதிகாலை வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உணவு ஒவ்வாமையால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மருத்துவமனையில் அவர்களை நான் சந்தித்தேன். தற்போது, அனைவரும் நலமாக உள்ளனர் என்றார் எம்.ஸ்ரீநிவாஸ்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு பயிற்சி மையத்தில் உணவு உண்ணவில்லையென்றும், அவர்கள் அனைவரும் வெளியே உள்ள உணவகத்தில் சாப்பிட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.சீதாராமுலுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.