பயங்கரவாதத்தை ஒடுக்கும் நோக்கத்தில், ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவற்காக, இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தர வேண்டும் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு, சீனாவின் ஜியாமென் நகரில், நிகழாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கான ஆலோசனைக் கூட்டம், ஜியாமென் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது:
மனித குலத்தின் பொது எதிரி, பயங்கரவாதம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பல்வேறு வடிவங்களில் மனித குலத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதம் குறித்து அனைவரும் வலைப்படுகிறார்கள். பயங்கரவாதத்தில் நல்ல பயங்கரவாதம், தீய பயங்கரவாதம் என்ற பாகுபாடு கிடையாது. பயங்கரவாதிகள் அனைவரும் உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்க வந்த குற்றவாளிகளாகவே நடத்தப்பட வேண்டும்.
மேலும், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக, ஐ.நா. தீர்மானம் கொண்டு வருவதற்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வருவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நல்லவர்கள், தீயவர்கள் என்று பாகுபாடு காட்டக் கூடாது என்று வி.கே.சிங் கூறினார்.
பதான்கோட் விமானப் படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா.வில் பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் இந்தியாவின் முயற்சிக்கு சீன அரசு முட்டுக்கட்டை போட்டதை வி.கே.சிங் மறைமுகமாகக் குறிப்பிட்டார்.