பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழைகளுக்காக, 20 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 1,09,000 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆண்டு கால ஆட்சியில் வீடுகள் கட்டுவது அதிகரித்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில், 13.82 லட்சம் வீடுகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 4,720 நகரங்களில், 20 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களால் (காங்கிரஸ்) 10 ஆண்டுகளில் செய்ய முடிந்த பணிகளை, பாஜக தலைமையிலான மத்திய அரசால் 3 ஆண்டுகளில் நிறைவேற்ற முடிகிறது. இதுவே, மற்றவர்களை விட பாஜக எந்தளவுக்கு மாறுபட்டது என்பதற்குப் போதுமான ஆதாரமாகும். ''2020-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு'' என்ற இலக்கை அடைவது சவாலான விஷயம்தான். இந்த இலக்கை எட்டுவதற்கு அரசியல் தலைவர்களும், அரசுத் துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்று வெங்கய்ய நாயுடு கூறியதாக, பின்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.