விமானம் மூலம் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வோர் ஜூலை மாதம் முதல் புறப்பாடு அட்டையை நிரப்ப வேண்டிய அவசியமிருக்காது.
எனினும், ரயில் அல்லது கப்பல் மூலமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களும், சர்வதேச எல்லையோர சோதனைச்சாவடிகளைக் கடந்து பிற நாடுகளுக்கு செல்பவர்களும் பயணிகளுக்கான விவரங்கள் அடங்கிய அட்டையை நிரப்ப வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள், ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் புறப்பாடு அட்டையை நிரப்ப வேண்டியதில்லை.
தற்போது புறப்பாடு அட்டையில் பெயர், பிறந்த தேதி, கடவுச்சீட்டு எண், முகவரி, விமானத்தின் விவரம், விமானம் புறப்படும் தேதி போன்ற விவரங்களை பயணிகள் நிரப்ப வேண்டும்.
இந்நிலையில், பிற வழிகளின் மூலம் கணினியில் இந்த விவரங்கள் பதிவாகி விடுவதால் பயணிகள் இனி புறப்பாடு அட்டையை நிரப்ப வேண்டிய அவசியமிருக்காது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்மூலம், நேரம் மிச்சப்படுவதால் பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை சோதிப்பது உள்ளிட்ட விமானப் புறப்பாடுக்கான நடைமுறைகள் விரைவாக நிறைவடையும். மேலும், விமான நிலைய அதிகாரிகளால் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கவனிக்க முடியும்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு விமானங்களில் பயணம் மேற்கொள்வோர் எவ்வித சிரமமுமின்றி விமானப் பயணம் மேற்கொள்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கெனவே, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கும் பயணிகள் தங்களைப் பற்றிய விவரங்களை அட்டைகளில் குறிப்பிடும் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.