பெங்களூரு: கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற சிறுவிவசாய கடனில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையின் மழைகால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இறுதி நாளான இன்றைய (ஜூன் 21) தொடரில் முதல்வர் சித்தராமையா உரையாற்றினார்.
அப்போது, வறட்சி பாதித்த பகுதிகளுக்கு செல்லும் போதெல்லாம், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.
இதனை ஏற்று, நேற்று (ஜூன் 20) வரை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற குறுகிய கால கடன், பயிர் கடன் ஆகியவற்றில் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 22 லட்சத்து, 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
இதனால் அரசுக்கு ரூ.8,165 கோடி சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசும், விவசாயிகள் தேசிய வங்கிகளில் பெற்ற கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என பேசினார்.