ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் சதீஷ் தவண் ஏவுதளத்தில் இருந்து 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை (ஜூன் 23) காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதையடுத்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் வேலை முடிவடைந்ததையடுத்து, ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கியது.
இந்த ராக்கெட் சதீஷ் தவண் ஆய்வு மையத்தில் உள்ள முதலாம் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படவுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 நானோ செயற்கைக்கோள்களையும், இந்தியாவின் சார்பில் கார்டோசாட் 2 செயற்கைக்கோளை இந்த ராக்கெட் சுமந்து செல்ல உள்ளது.
பூமியை துல்லியமாக கண்காணிக்கவும் தொலையுணர்வு வசதிகளை மேம்படுத்த கார்டோசாட் வகை செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே கார்டோசாட்-2சி, கார்டோசாட்-2டி செயற்கைகோள்களை இஸ்ரோ அமைப்பு விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.
இப்போது அந்த வரிசையில் கார்டோசாட் 2 இ செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்புகிறது. கார்டோசாட் 2 இ செயற்கைக்கோள் 712 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
இந்தச் செயற்கைக்கோளில் நிலப் பகுதியை துல்லியமாக படம் பிடிக்க நவீன கேமராக்கள், தொலையுணர் கருவிகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.