தாணே: மகாராஷ்டிரா மாநிலம் தாணே ரயில் நிலைய பிளாட்பாரத்தில், மீனாட்சி(24) என்கிற பெண்ணுக்கு நேற்றிரவு ரயில்வே பெண் காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் அரண் அமைக்க ரயில்வே மேடையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மீனாட்சியும் அவரின் கணவர் சந்தீஷ் ஜாதவ் நேற்றிரவு காட்கோபர் என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக, தாணே ரயில் நிலையத்தின் தடம் எண் 10க்கு வந்தனர். ரயில் ஏறுவதற்கு முன்னரே மீனாட்சிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உதவிக்காக அவரது கணவர் அழுதார், இதையடுத்து அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) அதிகாரி ஷோபா மோத்ஹி மற்றும் பெண் துப்புரவுப் பணியாளர்கள் ஒரு திடமான அட்டையை விரித்து அரண் போல நின்று மீனாட்சிக்கு பிரசவம் பார்த்தனர். மீனாட்சியின் அலறல் சத்தத்தில் ரயில் நிலையமே அதிர்ந்த சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் மீனாட்சி.
பின்னர், பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாட்ஃபாரத்தில் பிறந்த அந்த அழகான குட்டி குழந்தையுடன் பெண் காவலர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நல் உள்ளம் கொண்டவர்களின் உதவிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம்.