புது தில்லி: "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு ஸ்வீடன் அளித்து வரும் ஆதரவுக்கு, அந்த நாட்டுப் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வெனிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து நரேந்திர தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஸ்வீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வெனுடன் வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடினேன். அப்போது, "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்துக்கு அந்த நாடு அளித்து வரும் ஆதரவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மும்பையில் கடந்த ஆண்டு நடைபெற்ற "இந்தியாவில் தயாரிப்போம்' கண்காட்சியில் ஸ்வீடன் பிரதமர் கலந்து கொண்டார்.
அந்த நாட்டின் முன்னணி நிறுவனங்கள் உள்பட 18-க்கும் மேற்பட்ட ஸ்வீடன் நிறுவனங்கள் அந்தக் கண்காட்சியில் பங்கேற்றன.
அந்த நிறுவனங்களின் காட்சியகப் பிரிவை பிரதமர் மோடியும், ஸ்டெஃபான் லோஃப்வேனும் கூட்டாகத் திறந்து வைத்தனர்.
இந்தியாவில் தற்போது 160 ஸ்வீடன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவில் 1.6 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 11 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஸ்வீடன் நாட்டுத் தூதர் ஹெரால்டு சாண்ட்பெர்க் கூறியதாவது:
ஸ்விடன் எப்போதும் மிகச் சிறந்த வர்த்தகக் கூட்டாளிகளையே நாடும்.
இந்தியாவில் ஸ்வீடன் நாட்டின் எரிக்ஸன் நிறுவனம்தான் முதல் முறையாக மின் கம்பிகளை கடந்த 1903-ஆம் ஆண்டு நிறுவியது. அன்று முதல் இன்று வரை இந்தியாவில் முதலீடுகளை அதிகரிப்பதில் ஸ்வீடன் ஆர்வம் காட்டி வருகிறது என்றார் அவர்.