மாட்டுத் தீவன ஊழல் வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பிகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ஜெகந்நாத் மிஸ்ரா ஆகியோர் வியாழக்கிழமை ஆஜராகினர்.
கடந்த 1990 முதல் 1995 வரை பிகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, மாட்டுத் தீவன கொள்முதலில் ரூ. 900 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இந்த முறைகேட்டில், அந்த மாநில முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.
பின்னர், இதுதொடர்பாக அவர்கள் இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இதில், ஒரு வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், தற்போது அவர் ஜாமீனில் உள்ளார்.
இதனிடையே, மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக ராஞ்சியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மீதான 3 வழக்குகளின் விசாரணையும், ஜெகந்நாத் மிஸ்ரா மீதான 2 வழக்குகளின் விசாரணையும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவும், ஜெகந்நாத் மிஸ்ராவும் வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜராகினர்.
இத்துடன் சேர்த்து இந்த மாதம் அவர்கள் இருவரும் 3-ஆவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 29 மற்றும் 30-ஆம் தேதிகளிலும், ஜூலை முதல் தேதியிலும் நடைபெற உள்ளது.