புதுதில்லி: பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக. ஆதரவு அளிப்பது சசிகலாவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக அம்மா அணி ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவித்தார்.
முன்னதாகவே சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நாடாளுமன்ற துணை சபாநாயகர், தினகரன் சந்தித்துப் பேசினார். அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், இன்று காலை தில்லியில் பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த. பின்னர் துணை சபாநாயகர் தம்பித்துரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது அதிமுக தலைமை கழகம் சார்பாக எடுத்த முடிவு. தலைமை கழக பொறுப்பாளர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளனர்.
அதாவது, பொது செயலாளர் சசிகலாவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து எடுத்த முடிவு தான் என்றார்.
மேலும், அதிமுகவின் இரு அணிகளும் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுகவில் பிளவு இல்லை என்பது தெளிவாக வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.