மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக அளிக்குமாறு அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, மகாராஷ்டிர அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகள், வனத் துறை அதிகாரிகள் உள்பட அரசு ஊழியர்கள் அனைவரும், அரசு-தனியார் துறையினரும், மாநகராட்சி ஊழியர்களும் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக அளிக்க வேண்டும்.
முதல்வரின் நிவாரண நிதிக்காகப் பெறப்படும் இந்தத் தொகை, மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் பகுதிகளில் அவர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்குப் பயன்படுத்தப்படும். மேலும், இந்த நிதி, விவசாயிகளுடைய குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் பயன்படுத்தப்படும் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மாத ஊதியம் - கட்சியினருக்கு சிவசேனை அறிவுறுத்தல்: இதனிடையே, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு உதவும் வகையில், சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநகராட்சி நிர்வாகிகள், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகிகள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக அளிக்குமாறு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள், 63 எம்எல்ஏக்கள், 600 மாநகராட்சி நிர்வாகிகள் உள்ளனர். இவர்களின் பங்களிப்புடன், விவசாயிகள் கடன் தள்ளுபடிக்காக, நன்கொடையாக ரூ.10 லட்சத்தை அளிப்பதற்கு சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார்.