புதுதில்லி: 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று போர்ச்சுகல் புறப்பட்டார்.
3 நாடுகள் சுற்றுப் பயணமாக இன்று புறப்பட்ட மோடி, திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தில்லியில் இருந்து இன்று புறப்பட்ட பிரதமர் மோடி போர்ச்சுக்கல் நாட்டிற்குச் புறப்பட்டார். அந்நாட்டு பிரதமர் அந்தோனியோ கோஸ்டாவை அவர் சந்தித்துப் பேசுகிறார். பேச்சுவார்த்தையின் போது இருநாடுகளுக்கிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து (ஜூன் 25, 26) அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திங்கட்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்கிறார். பேச்சுவார்த்தையின் போது வர்த்தகம், பாதுகாப்பை மையமாக வைத்து இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பினும், அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பணி விசா வழங்குவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து மோடி விவாதிப்பார் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்களை சந்திக்கும் மோடி, இந்தியாவில் தொழில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டுள்ளனர். கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் சத்ய நாதெல்லா ஆகியோரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகின்றனர்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு 27 ஆம் தேதி பிரதமர் மோடி நெதர்லாந்து புறப்படுகிறார். 70 ஆண்டு கால இந்தியா-நெதர்லாந்த் நட்பை கௌரவிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
அந்நாட்டுப் பிரதமர் மார்க் ரூட்டுடன் தீவிரவாத எதிர்ப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மோடி பேச்சு நடத்துவார். இந்தியாவில் முதலீடு செய்வதில் முன்னணி நாடாக திகழும் நெதர்லாந்து, பிரதமர் மோடியின் வருகையால் இருநாட்டு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப் பயணம் குறித்து மோடி, தனது டுவிட்டர் பக்க பதிவில், இந்த சுற்றுப்பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாடுகளுடன் சுமூகமான உறவு பேணப்படுவது மட்டுமல்லாமல், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.