கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) இனி ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 1967-ஆம் ஆண்டில் கடவுச்சீட்டு சட்டம் இயற்றப்பட்டது. அதன் 50-ஆவது ஆண்டு நிறைவையொட்டி தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, வெளியுறவுத்துறை இணை அமைச்சர்கள் வி.கே.சிங், எம்.ஜே.அக்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கடவுச்சீட்டு சட்டம் தொடர்பான நினைவு தபால்தலையை அஞ்சல் துறை வெளியிட்டது. அப்போது சுஷ்மா பேசியதாவது:
கடவுச்சீட்டுகள் குறைந்தது இரு மொழிகளில் இருக்க வேண்டும். அனைத்து அரபு நாடுகளிலும் கடவுச்சீட்டுகள் அரபு மொழியில் உள்ளன. ஜெர்மனியில் ஜெர்மன் மொழியிலும், ரஷியாவில் ரஷிய மொழியிலும் கடவுச்சீட்டுகள் அச்சிடப்படுகின்றன. எனவே, நம் நாட்டில் இனி கடவுச்சீட்டுகள் உள்ள விவரங்கள் இனி ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தியிலும் அச்சிடப்படும். இது தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம்.
தத்கால் கடவுச்சீட்டுகள் கோரி விண்ணப்பிக்கும்போது குடும்ப அட்டைகளைச் சமர்ப்பிக்கலாம். இந்த வசதியானது கிராமப்புறங்களில் பான் அட்டையை வைத்திராதவர்களுக்கு மிகவும் உதவும்.
முதியவர்களுக்கான கடவுச்சீட்டுகளுக்கு கோரிக்கை அதிகரித்துள்ளது. 8 வயதுக்குள்ளும் 60 வயதுக்கு மேலும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு கடவுச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இது நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.
வேத காலத்தில் 8 வயதில் குழந்தைகள் குருகுலத்தில் சேர்க்கப்படுவார்கள். 60 வயதாகும்போது வானப் பிரஸ்தம் என்ற சமூக சேவைக்கான வாழ்க்கை முறையில் ஈடுபடுவார்கள். கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் சிரமங்கள் இருப்பது குறித்து எனக்கு புகார்கள் வந்துள்ளன. கடவுச்சீட்டு விதிமுறைகளை நான் படித்துப் பார்த்தேன். அப்போது சில விதிமுறைகள் தேவையற் ôகவும், நடைமுறைக்கு ஒவ்வாதவையாகவும் உள்ளன. கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட சர்வதேச பயண ஆவணங்களைப் பெறுவதற்கான விதிமுறைகளைத் தளர்த்துவதற்கு வெளியுறவு அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார் சுஷ்மா.