மத்திய அரசின் பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 30 நகரங்களின் பட்டியல் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் தமிழகத்திலுள்ள திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய 4 நகரங்களும், புதுச்சேரியும் இடம்பெற்றுள்னன.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் நாட்டிலுள்ள 100 நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்ற மத்திய அரசு கடந்த 2015-இல் திட்டமிட்டது.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ. 500 கோடி வீதம் வழங்கப்படும். இதன்மூலம், இந்த நகரங்களில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 60 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 40 இடங்களுக்கு 45 நகரங்கள் போட்டியிட்டன. எனினும், அவற்றில் 30 நகரங்கள் மட்டுமே தேர்வாகியுள்ளன.
இத்துடன் சேர்த்து, பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட நகரங்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்களுக்கு மொத்தம் ரூ. 57,393 கோடி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், ரூ. 46,879 கோடி அடிப்படை உள்கட்டமைப்பு திட்டங்களுக்காகவும், ரூ. 10,514 கோடி தொழில்நுட்ப உதவி திட்டங்களுக்காகவும் செலவிடப்படும்.
இத்துடன் சேர்த்து, இந்த 90 நகரங்களுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த தொகை ரூ. 1,91,155 கோடி ஆக உயர்ந்துள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.
பட்டியலில் இடம்பெற்றுள்ள எஞ்சிய நகரங்கள் (அடைப்புக்குறிக்குள் நகரம் அமைந்துள்ள மாநிலம்):
திருவனந்தபுரம் (கேரளம்), பிலாஸ்பூர், நயா ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), அமராவதி (ஆந்திரப் பிரதேசம்), ராஜ்கோட், காந்திநகர், தாஹோத் (குஜராத்), பாட்னா, முஸாஃபர்பூர் (பிகார்), பெங்களூரு (கர்நாடகம்), கரீம்நகர் (தெலங்கானா),
சாகர், சாத்னா (மத்தியப் பிரதேசம்), கர்நால் (ஹரியாணா), பிம்ப்ரி சிஞ்ச்வாட் (மகாராஷ்டிரம்), டேராடூன் (உத்தரகண்ட்), சிம்லா (ஹிமாசல பிரதேசம்), பாஸிகாட் (அருணாசலப் பிரதேசம்), ஜம்மு, ஸ்ரீநகர் (ஜம்மு -
காஷ்மீர்), அலகாபாத், ஜான்சி, அலிகர் (உத்தரப் பிரதேசம்), ஐஸால் (மிúஸாரம்), காங்டாக் (சிக்கிம்).
தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட நகரங்கள் பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.