கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத்தகடு பதிக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்தில் சேதம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக கோயிலைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியை வைத்து 3 பேரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சபரிமலை கோயிலை நிர்வகித்துவரும் திருவாங்கூர் தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தேக்குமரத்தில் உருவாக்கப்பட்டு தங்கத் தகடு பதிக்கப்பட்ட புதிய கொடிமரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை நிறுவப்பட்டது. அந்த மரத்தின் ஒரு பாகம் சேதம் அடைந்திருப்பது பிற்பகலில் கண்டறியப்பட்டது.
கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரசாயனத்தை கொடிமரத்தில் சிலர் தெளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொடிமரத்தை தடயவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொடிமரத்தில் பதிக்கப்பட்ட தகட்டில் 9.16 கிலோ தங்கமும், 17 கிலோ வெள்ளியும், 300 கிலோ செம்பும் கலக்கப்பட்டுள்ளது.