ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 65 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்டி லால் தேலி விவசாயம் செய்துவந்தார். பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் சிலரிடம் அவர் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் மரம் ஒன்றில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மகன் விஷ்ணு தேலி தெரிவித்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பக்டி லால் தேலி தூக்கிட்டுக் கொண்டதை கவனித்த அவரது மகன் விஷ்ணு அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடன் தொல்லை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
காங்கிரஸ் கண்டனம்: இதனிடையே, விவசாயி பக்டி லால் தேலிக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இரங்கல் தெரிவித்தார்.
"கடந்த ஒரு வாரத்தில் 3 விவசாயிகள் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களின் இறப்புக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை மாநில அரசு அசட்டை செய்து வருகிறது' என்றும் சச்சின் பைலட் குற்றம்சாட்டினார்.