பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான டீசல் வாகனங்களை விற்பதற்கு தடையின்மைச் சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்படாத பிற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை பட்டியலிட்டுள்ளது.
தில்லியில் ஓடும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய டீசல் வாகனங்களுக்குத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) கடந்த ஆண்டு உத்தரவிட்டது. மேலும், பிற மாநிலங்களில் அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இந்த வாகனங்களை மறுவிற்பனை செய்வதற்கு தடையின்மைச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குமாறு தில்லி அரசின் மண்டல ப் போக்குவரத்து அதிகாரிக்கு (ஆர்டிஓ) தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் உள்ள உரிமையாளருக்கு வாகனத்தை விற்கும் போது, பதிவுபெற்ற துறையிடமிருந்து தடையின்மைச் சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
இதனால், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை மறு விற்பனை செய்ய தடையின்மைச் சான்றிதழ் வழங்க முடியாத மாவட்டங்கள் குறித்த பட்டியலை தில்லி அரசின் போக்குவரத்துத் துறை பெற்றுள்ளது.
இதுதொடர்பான போக்குவரத்துத் துறை உத்தரவில், "ராஜஸ்தானில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வாகனங்களுக்கு என்ஓசி வழங்கப்படமாட்டாது.
பிகார், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைப் பொருத்தமட்டில், பழைமையான டீசல் வாகனங்களுக்கு என்ஓசி வழங்குவதற்கான மாவட்டங்கள் பட்டியலை போக்குவரத்துத் துறை அளித்துள்ளது. அதன்படி பிகாரில் 18 மாவட்டங்களுக்கு மட்டும் என்ஓசி வழங்கப்படும். பாட்னா, முஸஃபர்பூர், தர்பங்கா, பகல்பூர் மற்றும் சமஸ்டிபூர் உள்பட எஞ்சியுள்ள மாவட்டங்களுக்கு என்ஓசி வழங்கப்படமாட்டாது.
மகாராஷ்டிரத்தில் மும்பை, தானே, நவி மும்பை, புணே, நாக்பூர், கோல்ஹபூர், நாசிக், ஷோலாப்பூர் உள்ளிட்ட 26 மாநகராட்சிகளைப் பொருத்தமட்டில், 10-15 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கு பதிவுபெற்ற துறையினர் என்ஓசி வழங்கமாட்டார்கள்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு மட்டும் என்ஓசி வழங்கப்படும். மேற்கு வங்கத்தில் பிஎஸ்-4 ரக வாகனங்கள் மட்டும் கோல்கத்தா பகுதிக்குள் மட்டும் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும். மாநிலத்தில் பிற பகுதிகளில் பிஎஸ் 3, பிஎஸ் 4 வாகனங்கள் மட்டும் பதிவு செய்ய முடியும்' என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.