விசாரணைக் குழுவைப் போல் மாறியுள்ள யோகி ஆதித்யநாத் அரசு

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, அரசாக அல்லாமல் விசாரணைக் குழுவாக மாறியுள்ளது என்று சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, அரசாக அல்லாமல் விசாரணைக் குழுவாக மாறியுள்ளது என்று சமாஜவாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌத்ரி கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 100 நாள்களை நிறைவு செய்யவுள்ளது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய சமாஜவாதி அரசின் சில திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, ஷியா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியங்களின் செயல்பாடுகள், கோமதி நதி மேம்பாட்டுத் திட்டம், நடமாடும் மழலையர் காப்பகங்கள் திட்டம் உள்ளிட்டவை குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பாஜக அரசு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், ஐஏஎஸ் அதிகாரி அனுராக் திவாரி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யோகி ஆதித்தயநாத் தலைமையிலான பாஜக அரசு வெறும் விசாரணைக் குழுவாக மாறியுள்ளது.
இது முழுக்க முழுக்க பழிவாங்கும் அரசியலாகும். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றில் தனது தோல்விகளை திசைதிருப்புவதற்காகவே இத்தகைய தந்திரங்களை பாஜக அரசு கையாள்கிறது.
விசாரணை என்று வரும்போது மாநில போலீஸாரை யோகி ஆதித்தயநாத் நம்புவதில்லை என்று தெரிகிறது. இதன் காரணமாகவே, அவர் எந்த விசாரணையையும் போலீஸாரிடம் ஒப்படைக்காமல் சிபிஐ வசம் ஒப்படைக்கிறார் என்றார் ராஜேந்திர சௌத்ரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com