ஜம்மு - காஷ்மீரில் ரமலான் கொண்டாட்டத்தின்போது சில இடங்களில் மோதல் சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரமலான், ஜம்மு - காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஸ்ரீநகரிலுள்ள ஹஸ்ரத்பல் மசூதி வளாகத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர்.
ஸ்ரீநகரிலுள்ள சோனாவர் மற்றும் சௌரா மசூதிகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றனர். இதேபோல், காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பிற நகரங்கள், மாவட்டத் தலைநகரங்களிலுள்ள மசூதிகளில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் சோபோர், அனந்த்நாக், ராஜ்போரா, சோஃபியான் ஆகிய நகரங்களிலும், ஸ்ரீநகரின் சஃபாகாடல் பகுதியிலும் சிற்சில மோதல் சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன.
எனினும், இவற்றில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
முன்னதாக சையது அலி கிலானி, மீர்வாயிஸ் உமர் ஃபரூக் உள்ளிட்ட பிரிவினைவாதத் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு ஸ்ரீநகர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரமலான் தினத்தில் சையது அலி கிலானி, யாசின் மாலிக் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து தொழுகையில் ஈடுபடும்போது வன்முறை வெடிக்க வாய்ப்பிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.