பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரகண்ட் மாநில எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார்.
பாஜக ஆளும் அந்த மாநிலத்தின் தலைநகர் டேராடூனில் உள்ள, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
முதல்வர் தலைமையில் ரகசியமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு 2 மணி நேரங்களுக்கு நீடித்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜகவின் 57 எம்எல்ஏக்கள், ஐந்து எம்.பி.க்களில் இருவர், ஒரு சுயேச்சை எம்எல்ஏ இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.
முன்னாள் முதல்வர்களும், தற்போதைய எம்.பி.க்களுமான பகத் சிங் கோஷியாரி, புவன் சந்திர கந்தூரி ஆகியோரும், எம்.பி. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஆகியோர் வேறு பணிகள் காரணமாக இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
எனினும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ராம்நாத் கோவிந்துக்கு போட்டியாக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கின்றன.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெறுவதற்காக, ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு தழுவிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
தமது சுற்றுப் பயணத்தை சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திலிருந்து தொடங்கிய அவர், அதற்கு அடுத்தபடியாக உத்தரகண்ட் மாநிலத்துக்கு திங்கள்கிழமை வந்தார்.
தனது சுற்றுப் பயணத்தின் அடுத்தக் கட்டமாக புதன்கிழமை (ஜூன் 28) சண்டீகர் நகருக்கும், வியாழக்கிழமை (ஜூன் 29) ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகருக்கும் செல்கிறார்.