புதுதில்லி: சமூக நல திட்டங்களுக்கு பயனாளர்கள் தங்கள் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் சார்பில் செயல்படும் நலத்திட்டங்களுக்கும், நேரடி மானிய பரிமாற்றம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் ஆதார் அட்டை விபரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அத்துடன் அவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசித் தேதி என்றும் அறிவித்து இருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வாறு மத்திய அரசு கோருவது சட்ட விரோதம் என்றும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வானது, மத்திய அரசின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி, அதற்கு தடை விதிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தது.