சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு மத்திய அரசு அவசரம் காட்டுவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவர் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த முந்தைய காங்கிரஸ் அரசு தீவிர முனைப்பு காட்டியது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக அதனை கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக, அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஜிஎஸ்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதன் காரணமாக, அந்தச் சட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசால் பல ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியவில்லை. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி மசோதாவை உடனடியாக அறிமுகம் செய்தது. பின்னர், அதனை அவசரக்கோலத்தில் நிறைவேற்றி தற்போது செயல்படுத்த தயாராகிவிட்டது.
உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல், ஜிஎஸ்டியை செயல்படுத்த மத்திய அரசு இத்தனை அவசரம் காட்டுவது ஏன்? என்று தனது சுட்டுரைப் பதிவில் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.