தனியார் வங்கி அதிகாரிகளின் முறைகேடுகளையும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) விசாரிக்க முடியும் என்று சிவிசி ஆணையர் டி.எம்.பாசின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:
தனியார் வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஊழல் ஒழிப்புச் சட்டம் 1988-இன்படி தனியார் வங்கிகளின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து அதிகாரிகளும் அரசு அதிகாரிகள் போலவே கருதப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்று இயங்கி வரும் தனியார் வங்கிகளின் பணியாளர்கள் அனைவரும் மத்திய விசாரணை அமைப்பின் கண்காணிப்பில் வருவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், வங்கிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படி தனியார் வங்கி அதிகாரிகளும் பொதுத் துறை வங்கி அதிகாரிகள் போலவே கருதப்படுவார்கள். எனவே, அவர்கள் மீது ஊழல், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அவற்றை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்றார் டி.எம்.பாசின்.