கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மீதான வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அந்த மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திகம்பர் காமத் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தபோது அந்த மாநிலத்திலுள்ள சுரங்கங்களில் சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளப்பட்டது தொடர்பாக மாநில குற்றப் போலீஸ் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தபோது திகம்பர் காமத் மீதான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பாரிக்கர் பதிலளித்துப் பேசுகையில், "திகம்பர் காமத் மீதான வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்த பிறகே, இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.