சமூக வலைதளங்களின் துணையுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவி வருவதன் மூலம் வெளியுறவுத் துறைக்கு சுஷ்மா ஸ்வராஜ் புதிய முகவரி கொடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான சந்திப்பில் மோடி பேசியதாவது:
இன்றைய உலகில் சமூக வலைதளம் என்பது மிகப்பெரிய ஆற்றல் வாய்ந்த ஒன்றாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி சிறந்த நிர்வாகத்தை வழங்க முடியும் என்பதற்கு சரியான உதாரணமாக சுஷ்மா விளங்குகிறார்.
உலகில் எந்த மூலையில் இருந்து இந்தியர்கள் அபயக்குரல் எழுப்பினாலும், அவர்களுக்கு உடனடியாக உதவி செய்யும் அமைப்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளங்கி வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் ஓர் இந்தியர், தமக்கு உதவுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிகாலை 2 மணிக்கு சுட்டுரையில் தகவல் அனுப்பினாலும், வெறும் 15 நிமிடங்களில் அவருக்கு பதில் அனுப்பப்பட்டுவிடும். அதன் பிறகு, அவருக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும். இதுவே சிறந்த நிர்வாகமாகும்.
கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், உலகில் பல்வேறு பகுதிகளில் ஆபத்தில் சிக்கியிருந்த சுமார் 80 ஆயிரம் இந்தியர்களை வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு தாயகம் அழைத்து வந்துள்ளது என்றார் மோடி.