பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் காயத்ரி பிரஜாபதியை அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், சிறையில் சந்தித்து பேசினார்.
பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டு லக்னௌவில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடக்கம் முதலே மறுத்து வரும் காயத்ரி பிரஜாபதி, பாஜக அரசு தம்மை வேண்டுமென்றே பழிவாங்குவதாகவும் தெரிவித்திருந்தார். சமாஜவாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங் யாதவும், காயத்ரி பிரஜாபதிக்கு ஆதரவாகவே கருத்து கூறி வருகிறார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் காயத்ரி பிரஜாபதியை முலாயம் சிங், செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேரம் அவர்கள் இருவரும் தனிபட்ட முறையில் பேசியதாகத் தெரிகிறது.
அதன் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த முலாயம் சிங் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காயத்ரி பிரஜாபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போலீஸாரிடம் ஒரு ஆதாரம் கூட இல்லை. அவருக்கு எதிராக பெரிய சதி வலை பின்னப்பட்டு வருகிறது. அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனால், சிறையில் ஒரு தீவிரவாதியைப் போல அவர் நடத்தப்பட்டு
வருகிறார்.
இதன் பின்னணியில் பாஜக அரசின் சதிச்செயல் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசவுள்ளேன் என்றார் அவர்.