புதுதில்லி: ரூபாய் 54,000 கோடிக்கும் மேலான கடனில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவதற்கு, குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தற்பொழுது ரூபாய் 54,000 கோடிக்கும் மேலான கடனில் சிக்கி தவித்து வருகிறது. இதனை மீட்கும் பொருட்டு ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க நேற்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. அத்துடன் ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்காக நிதி அமைச்சர் தலைமையில் ஒரு பிரத்யேக குழு அமைக்கப்படும் என்றும், பங்கு விற்பனைக்கான காலம் மற்றும் வழிமுறைகளை இந்த குழு விரைவில் உருவாக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும், இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமானது, ஏர் இந்தியா பங்குகளை வாங்க விருப்பம் தெர்வித்து கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய விமான போக்குவரத்து துறை செயலர் ஆர்.என்.சவுபே தெரித்துள்ளார்.
மேலும் ஏர் இந்தியா பங்குகள் விற்பனை குறித்து வேறு சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.