புது தில்லி: 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்பிஐ-யின் ரூபாய் நோட்டு அச்சகங்களில் தற்போது 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதாகவும், புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ஆர்பிஐ இரண்டு வாரங்களுக்கு முன்பு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை விடவும் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களோடு இந்த 200 ரூபாய் நோட்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, ரூ.17.9 லட்சம் கோடி மதிப்பிலான பண நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது.
அதன்பிறகு வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புதிய ரூபாய் நோட்டுகள் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நிலவரப்படி, தற்போது 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் என ரூ.14.6 லட்சம் கோடி அளவுக்கு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த பண மதிப்பை விட இது 18.4 சதவீதம் குறைவாகும்.
இந்த நிலையில், புதிதாக 200 ரூபாய் நோட்டுகளும் விரைவில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.