ஜம்மு}காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் புனித யாத்திரை, பல அடுக்குப் பாதுகாப்புடன் புதன்கிழமை தொடங்கியது.
முதல் குழுவாக, ஜம்முவில் இருந்து 72 வாகனங்களில் 2,280 பக்தர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் வாகனங்களை, ஜம்மு}காஷ்மீர் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் பிரியா சேத்தி, துணை முதல்வர் நிர்மல் சிங் ஆகியோர் அதிகாலை 5.30 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முதல் குழுவில் 1,811 ஆண்களும், 422 பெண்களும், 47 சாதுக்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 698 பேர் பால்டால் முகாமுக்கும், 1,535 பேர் பஹல்காம் முகாமுக்கும் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த யாத்திரையை பக்தர்கள் சுதந்திரமாக அனுபவிக்கும் வகையில், அனைத்து விதமான பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக துணை முதல்வர் நிர்மல் சிங் கூறினார்.
அமர்நாத் யாத்திரை மேற்கொள்வோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக புலனாய்வுத் துறை செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது. அதையடுத்து, அமர்நாத் யாத்திரைக் குழுவினருக்கு சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குண்டு துளைக்காத பதுங்கும் வசதிகள், மோப்ப நாய்கள், கண்காணிப்புக் கேமராக்கள் என நவீன பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் முதல் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.
அமர்நாத் யாத்திரை செல்வோருக்குப் பாதுகாப்பு அளிப்பது மிகவும் சவாலான விஷயம் என்று சிஆர்பிஎஃப் படைப் பிரிவின் இயக்குநர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா கூறினார்.
இமயமலையில் உள்ள பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காக, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு 48 நாள்கள் நடைபெற்ற இந்த யாத்திரை, நிகழாண்டில் 40 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட் 7}ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.