புதுதில்லி: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக எம்பிக்கள் தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்தித்து வழங்கினர்.
விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டோம் என்று கோரி அந்தப் பகுதிமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதமொன்றை எழுதினர். அக்கடிதத்தை திமுக மாநிலகலவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் கனிமொழி ஆகிய இருவரும் இன்று மாலை தர்மேந்திரா பிரதானை நேரில் சந்தித்து அளித்தனர்.
அதன் பின்னர் திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அளித்தோம். அத்துடன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் தெரிவித்தோம். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக இத்தகைய திட்டங்கள் பல்வேறுஇடங்களில் செயல்படுத்தப்படும் நிலையில் இங்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆனால் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்படுவதாலும், நிலத்தடி நீர் முற்றிலுமாக அழிந்து போகும் அபாயத்தினாலும் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்பதை தெளிவு படுத்தினோம்.
அப்படி முக்கியமான திட்டம் என்று நீங்கள் கருதினால் திட்டம் பற்றி முழுமையாக மக்களிடம் தெளிவுபடுத்தி, அவர்களை மாற்ற முயற்சியுங்கள் என்றும் நாங்கள் தெரிவித்தோம்
நாங்கள் கூறிய கருத்துக்களை பரிசீலிப்பதாக தெரிவித்த அமைச்சர், எந்த ஒரு திட்டமானாலும் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நிறைவேற்றப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.