கொழும்பு: திங்கள்கிழமை அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என்று இலங்கை கடற்படை மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை அன்று இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தின் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கழுத்தில் தோட்டா பாய்ந்து மீனவர் பிரிட்ஜோ (21) அதே இடத்தில் உயிரிழந்தார். செரோன் (22) என்ற மற்றொரு மீனவர் காலில் காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து கடலோர மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் மரணம் அடைந்த மீனவரை நாங்கள் சுடவில்லை என்று இலங்கை கடற்படை நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இலங்கைக் கடற்படை இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
திங்கள்கிழமை அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான தமிழக மீனவரை நாங்கள் சுடவில்லை என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். தளபதியின் உத்தரவு இல்லாமல் அவர்கள் துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்த மாட்டார்கள்.
இதுவரை அத்துமீறி எல்லை தாண்டி மீன்பிடித்த 88 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் 146 படகுகள் இலங்கை கடற்படை வசம் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது