கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எனக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருப்பது சட்டவிரோதம் என்று நீதிபதி கர்ணன் பேட்டியளித்துள்ளார்.
நீதிபதி சி.எஸ்.கர்ணன் தற்போது மேற்கு வங்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நீதிபதி கர்ணன், ஊழல் குற்றச்சாட்டு பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இது குறித்த விவகாரத்தில் ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், உச்ச நீதிமன்றம் அவருக்கு இன்று கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
என் மீது இன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் தடை செய்யப்பட வேண்டும். கைது வாரண்ட் பிறப்பிக்க அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இது முழுக்க சட்ட விரோதம். எந்த விதமான நியாமுமின்றி என்னுடைய வாழ்க்கையை அழிக்க எடுக்கப்பட்ட ஒரு தலைபட்சமான முடிவு இது. ஒரு தலித் சமூக நீதிபதியான நான் ஒரு பொது அலுவலகத்தில் என்னுடைய பணியை செய்ய விடாமல் தடுக்கப்படுகிறேன். இது அராஜகம்.
இவ்வாறு அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.