தாய்மை அடைந்த பெண்களுக்கு ஆறு மாதம் பேறுகால விடுமுறை அளிக்க வகை செய்யும் பேறுகாலப் பலன்கள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை 12 வாரங்கள், அதாவது மூன்று மாதகாலம் பிரசவக் கால விடுமுறையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த விடுமுறையை ஆறு மாதங்களாக உயர்த்துவதற்காக பழைய பேறு காலப் பலன்கள் மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டது.
இந்த மசோதா கடந்த குளிர்காலத் தொடரில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருந்துவந்த இந்த மசோதா, வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைதளமான சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
பேறுகாலப் பலன்கள் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத நிகழ்வாகும். மகளிரின் வளர்ச்சிக்கான பணிகளை பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இந்தச் சட்டத்தின் மூலம், அலுவலகங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான அறைகளும் ஒதுக்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளார்.