ஊழல் வழக்குகளில் 3 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அந்த மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அந்த மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள அமரீந்தர் சிங், காவல்துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அவர்களிடம் தெரிவித்ததாவது: ஊழலுக்கு எதிராக விரைவாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய, புகார் தெரிவிக்கப்பட்ட 3 நாள்களுக்குள் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஊழல் வழக்குகளில் விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்பதை அதிகாரிகள் கண்காணித்து, உறுதிசெய்ய வேண்டும். மின்னணு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வழக்குகளில் தாமதத்தைத் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் புகார் அளிப்பவர், குற்றம் சாட்டப்படுபவர் என இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும்.
அரசின் பொதுநலச் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களைச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் நலனுக்காக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அனைவரும் வெளிப்படையாக உணரும் அளவுக்கு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அமரீந்தர் உத்தரவிட்டார்.