புது தில்லி: புது தில்லி ஜந்தர்மந்தரில் மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்ய முயன்ற 2 தமிழக விவசாயிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தில்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் திடீரென திருச்சியைச் சேர்ந்த ரமேஷ், அகிலன் ஆகிய 2 விவசாயிகள், மரத்தின் மீது ஏறி அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
அங்கிருந்த விவசாயிகளும், நடிகர் விஷால் உள்ளிட்டோரும் அதிர்ச்சி அடைந்தனர். மரத்தின் மீது ஏறி விவசாயிகளை இறங்கி வருமாறு கோரிக்கை விடுத்தனர். தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு வந்து விவசாயிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அனைவரது வேண்டுகோளையும் ஏற்று 2 விவசாயிகளும் மரத்தில் இருந்து இறங்கி வந்தனர். அவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர்.
ஏன் இந்த முடிவை எடுத்ததாக மற்றவர்கள் கேட்டதற்கு, யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை. விவசாயிகள் என்றால் அகதிகளா என்று அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டும் மத்திய அரசு திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஒரு எம்.பி.க்கூட எங்களை சந்திக்கவில்லை. விவசாயிகளுக்காக ஒரு அரை மணி நேரம் ஒதுக்கக் கூடாதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமல் இருப்பதாகவும், வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.