ஜஜ்ஜார்: ஹரியானா மாநிலத்தில் நடந்த 10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது, சமூக தளத்தில் வெளியான விடியோ மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பள்ளியில் நடைபெற்ற பொதுத் தேர்வில், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களது நண்பர்கள் வெளியில் இருந்து பிட் கொடுத்து உதவிய காட்சிகள் அடங்கிய விடியோ சமூக தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த 10ம் வகுப்புப் பொதுத் தேர்வில் இந்த முறைகேடு நடந்துள்ளது. இதுபோன்ற விடியோ வெளியாகியிருப்பது இது முதல் முறை அல்ல.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்று தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் விடியோக்களாக வெளியாகின. சமீபத்தில் பிகாரில் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் பிட் கொடுத்து உதவிய விடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
முன்னதாக, இந்திய தபால் துறை நடத்திய தேர்வில், தமிழ்ப்பாடத்தில் ஹரியானா மாணவர்கள் 25க்கு 20க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பது, தேர்வெழுதிய தமிழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இதுபோன்ற விடியோ வெளியே வந்திருப்பது, தமிழக மாணவர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் உள்ளது.