உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்ததாக மூன்று பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சாம்லி மாவட்டம் மதாவி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக மாடுகளைக் கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கிராமத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோ மாட்டிறைச்சியை கைப்பற்றிய போலீஸார், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச பசுவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல முஸாஃபர்நகர் மாவட்டத்தில் வெட்டுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 எருமை மாடுகளைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.