பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு இனி இரவுப் பணி வேண்டாம் என்று அம்மாநில சட்டசபையின் கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக சட்டசபை உறுப்பினர் என். ஏ.ஹாரீஸ் தலைமையில் 21 பேர் கொண்ட சட்டசபை உறுப்பினர்கள் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவானது கர்நாடக மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் பணிச் சூழல் மற்றும் நிலை குறித்து கடந்த நவம்பர் மாதம் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த குழுவானது இன்று கர்நாடக சட்டசபையில் தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த குழுவினர் செய்திருந்த பரிந்துரைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பெண்களை இரவு பணிக்கு அமர்த்தக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக ஆண்களை இரவு பணிகளில் அமர்த்திக் கொள்ளலாம் என்பது ஒரு முக்கியமான பரிந்துரையாகும். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக அக்குழுவினர் தெரிவித்தனர்.
முன்னதாக மத்திய அரசு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் சட்டம் 1961-ல் செய்திருந்த திருத்தத்தின் படி இரவுப் பணிகளில் பெண்களை அனுமதிக்கலாம் என்று கூறியிருந்தது. அதற்கேற்றபடி மாநில அரசும் இரவுப் பணிகளில் பெண்கள் ஈடுபடலாம் என அனுமதி அளித்து சில கட்டுப்பாடுகளை நீக்கி கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
தற்போது கர்நாடக சட்டசபை கூட்டுக் குழு செய்துள்ள பரிந்துரையானது மாநில அரசின் விதிகளுக்கு எதிராக அமைந்துள்ளதால் குழுவின் அறிக்கையை மாநில அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.