புதுதில்லி: புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் மூன்று மத்திய அமைச்சர்களை இன்று சந்தித்துப் பேசினார்கள்.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அவர்களை தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அவர்களது குறைகளை கேட்டறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, அவர்களது பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்களை தமிழக விவசாயிகள் நேரில் சென்று சந்தித்து குறைகளை எடுத்துக் கூற ஏற்பாடு செய்வதாக கூறினார்கள்.
அதனடிப்படையில் விவசாயிகள் முதலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்துப்பேசினார்கள். பின்னர் அவர்கள்;மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார்கள். இறுதியாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்கள். இந்த சந்திப்புகளின் பொழுது தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
சந்திப்பின் பொழுது அமைச்சர்கள் தங்களை அமர வைத்து பேசியதுடன் குறைகளைப் பொறுமையாக கேட்டதாக விவசாயிகள் அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.