புது தில்லி: இப்போது நடைமுறையில் உள்ள ஐந்தாண்டு திட்டத்துக்குப் பதிலாக, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூன்றாண்டு செயல் திட்டத்தை அமல்படுத்த நீதி ஆயோக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இப்போதைய 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட ஐந்தாண்டு திட்டத்தின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது.
மூன்றாண்டு செயல் திட்டத்தின்கீழ் மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இலக்குகளை எட்ட வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதி குறைக்கப்படும். அதே நேரத்தில் மத்திய அரசு கூறும் இலக்கைகளை எட்டும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசுடன் ஒத்துழைக்கும் வகையில் மாநில அரசுகள் சீர்திருத்தங்கள் தொடர்பான மசோதாக்களை நிறைவேற்றும் என்று நீதி ஆயோக் காத்திருந்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில் இதில் ஒத்துழைக்கவில்லை என்று நீதி ஆயோக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.